Friday, January 25, 2008

இந்திரனே சாலும் கரி

இந்திரனே சாலும் கரி

திருக்குறளில் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின் கடைசி அடி இவ்வாறு வரும் ‘இந்திரனே சாலும் கரி”. இந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம் எனக்குள் எழுந்தக் கேள்விகள் நிறைய என்றாலும் அவற்றுக்கு ஏனோ முக்கியத்துவம் கொடுக்காமலே இருந்து வந்தேன். சமீபத்தில் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்தப் பாடலைச் சொல்லி இதற்கு சமண விளக்கம் சொல்ல சொன்னார். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு திருக்குறள் ஒரு சமண நூல் என்பீர்களே இதற்கு என்ன விளக்கம் சொல்ல போகிறீர்கள் என்று கேட்டார். அவருக்கு அளித்த விளக்கத்தையே இங்கு கட்டுரையாகக் கொடுத்திருக்கிறேன். படித்துவிட்டு பின்னூட்டு இடுங்களேன்.

திருக்குறள் “நீத்தார் பெருமை” என்னும் அதிகாரத்தில் வரும் அந்தக் குறள் இதுதான்.

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி” - திருக்குறள் (25)

பரிமேலழகர் உரை

திருக்குறள் உரையாசிரியர்களில் சிறந்தவராகக் கருதப்படும் பரிமேலழகர் என்ன சொல்லியிருக்கிறார் என்று முதலில் பார்ப்போம்.

ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று.

அவர் மேலும் விரித்து,

ஐந்தும் என்னும் முற்று உம்மையும், ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், ‘இந்திரனே சாலும் கரி’ என்றார்.
அவர் மேலும் விளித்து கெளதமர்க் கதையை இக்குறளுக்கு சான்றுக் காட்டிருக்கிறார்.

உரை ஆய்வு

“தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், ‘இந்திரனே சாலும் கரி’” என்ற அவரின் விரிவுரையை எடுத்துக் கொள்வோம்.

இவ்விரிவுரை பொருந்தாது எவ்வாறெனின், இந்திரன் ஐந்து புலன்களை அடக்காதது போலவும், அப்படி அடக்கிய முனிவரின் சாபத்திற்கு ஆளானான் என்பது போலவும் உரை வகுத்திருக்கிறார். “சாபம்” என்ற சொல் இங்கு தேவையில்லாதது. வலிந்துப் புகுத்தப்பட்டது என்றே கருதவேண்டியிருக்கிறது. இச்சொல், பின்னாளில் பல குழப்பத்திற்கும் காரணமாக அமைய வழிக்கோலிவிட்டது எனலாம். காட்டாக, கெளதமர் என்ற முனிவர் தன் மனையாளிடம், இந்திரன் தவறாக நடந்துக் கொண்டதிற்காக அவனுக்கு சாபமிட்டார் என்று இக்குறளுக்கு உரையெழுதியிருக்கிறார். இவர். இது பொருந்தாது!
ஏன் குறளும் அக்கதையும் பொருத்தமாகத் தானே இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு யான் சொல்வது இதுதான். மேலெழுந்தவாரியாகப் பார்த்தோமானால் அவ்வாறு தான் தோன்றும். இக்கதை உள் உண்மையை மறைக்கத் தோன்றிய கதை என்று துணிந்துக் கூறலாம்.

மணக்குடவர் உரை

நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.
அவர் மேலும் தன் விரிவுரையில்,

இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

உரை ஆய்வு

இவ்வுரை பரிமேலழகர் உரையை விட சிறந்தது. நேரிதன் உரை வகுத்திருக்கிறார். இங்கு முற்றும் துறந்தவர் ஆற்றலைக் கண்டு இந்திரனும் அஞ்சுவான் என்பதை சான்றாக கருதுகிறார் உரையாசிரியர். இது சமண உரை. இதனாலேயே யான் இவ்வுரைச் சிறந்தது என்று கூறுகிறேன் என்று கருதவேண்டாம்.

என் விளக்கம்

ஒரு குறளின் பொருளையறிய அக்குறளின் உரையை மட்டுமில்லாது அது எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது என்பதையும் கருதிற்கொண்டால்தான், அந்த குறளின் உட்கருத்தை தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும். அதுவே சிறப்பாம். பரிமேலழகர் உரையாசிரியர்களில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை. இது முற்றிலும் உண்மையும் கூட. ஆனால், இவரிடம் உள்ள ஒரு குறை. காய்த்தல், உவத்தல் அகற்றி உரை செய்யாமைதான்.

காலத்தால் முந்தையது மணக்குடவர் உரை. பரிமேலழகர் இவர் (மணக்குடவர்) உரையையே பெரிதும் தன் உரையில் தழுவி சென்றிருந்தாலும், எந்தெந்த குறளில் தன் சமயத்தைப் புகுத்த முடியுமோ, அங்கெல்லாம் தான் சார்ந்த சமயத்தைப் புகுத்தி உரைக் கண்டிருக்கிறார். அவ்வாறே இந்தக் குறளிலும் புகுத்தியிருக்கிறார் என்பது நிதர்சணம்.

அப்படியென்ன தன்னுடைய சமயத்தை புகுத்தியிருக்கிறார்? எனின்,

இந்த குறள் சொல்லப்பட்ட இடம் ‘நீத்தார் பெருமை”. ‘நீத்தார்’ என்பது ‘முற்றும் துறந்த முனிவர்’களைக் குறிப்பது. அஃதாவது, முற்றும் துறந்தவர்களுடைய பெருமை என்பது பொருள். அவ்வாறே, அந்த கருத்திலேயே அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. முற்றும் துறந்தவர் என்றால் யார்?

என்றால்! தன்னுடைய ஐந்து புலன்களால் வரும் நுகர்ச்சியாகிய ஆசையை அடக்கி அல்லது அவித்து, தன்னுடையது என்று ஏதும் இல்லாமல், உற்றாற்கு உடம்பும் மிகை என்பதுபோல் யாரொருவர் இருப்பாரோ அவரே முற்றும் துறந்த முனிவர். இவரிடம் விறுப்பு, வெறுப்பு, காழ்ப்பு போன்ற குணங்கள் அமையா. அப்பேர்ப்பட்டவர்களையே முற்றும் துறந்தவர் என்பது சாலப் பொருந்தும். அப்பேர்ப்பட்டவர்கள் யாருக்காவது சாபம் விடுவார்களா? என்பது முதற் கேள்வி. அப்படி சாபம் விட்டால் தன்னிலை தாழ்ந்தவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்கு நமக்கும் (இல்லறத்தார்) வித்தியாசம் இல்லாமற்போய்விடும். இல்லையா?

ஏன்யா? தன்னுடைய பொண்டாட்டியிடம் யாராவது வாலாட்டினால் எவராவதுப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? என்று யாராவது கேட்க கூடும்?

சும்மா இருக்க முடியாதுதான். அதற்கு யான் கூறும் சமாதானம் இதுவே. துறந்தவர் என்று நாம் யாரைச் சொல்கிறோம்? மனைவி, மக்கள், சுற்றம் இவர்களை ஒதுக்கியர்களைத்தான் துறந்தவர்கள் என்கிறோம். அதிலும், தன்னுடைய ஐந்து புலன்களையும் வென்றவர்களை “முற்றும் துறந்தவர்கள்” என்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது மனைவியுடன் வாழ்ந்த கெளதம முனிவரை எப்படி முற்றும் துறந்தவர் என்று சொல்ல முடியும்? வெறும் ‘துறந்தவர்” என்றும் சொல்லமுடியாத போது முற்றும் துறந்தவர் என்று எப்படி கூறமுடியும்? என்னை?

குறளாசிரியரோ முற்றும் துறந்தவர்கள் பெருமையை சொல்லவருகிறார்? கெளதம முனிவர் துறந்தவரே அல்லர் அப்படியிருக்க கெளதம முனிவருடைய பெருமையை இக்குறள் கூறுகிறது என்பது எங்ஙனம் பொருந்தும்? சிந்திக்கவும்!

ஆதலால், முற்றும் துறந்தவர்கள் யாரையும் சாபம் விடமாட்டார்கள் என்பதம் அப்படி சாபம் விடுபவர்கள் முற்றும் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள் என்பதும் பெறப்படுகிறது. என்னை? அது நிற்க!

இன்னும் சிலருக்கு சந்தேகம் இருக்கக்கூடும் இல்லையா? கீழே வரும் சில குறட்பாக்கள் மூலம் அந்த சந்தேகங்களை களைய முயற்சிக்கிறேன்.

குறளாசிரியர் “துறவு” என்பதைப்பற்றி கூறுவதைக் காணலாம்.

“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு” - 343

என்னுடைய உரை: துறவு என்பது என்ன? அடக்க வேண்டும் ஐந்து புலன்களையும் (புலன்களால் வரும் இச்சையை நுகர்ச்சியை), விட்டுவிட வேண்டும் எதையெல்லாம்? எது எது வேண்டும் என்று நினைக்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டுவிட வேண்டும். இங்கு ‘வேண்டிய’ என்பது மிகுபொருள் பொதிந்ததாம். மனைவி, மக்கள் (பிள்ளைகள்), சுற்றம், உறவினர் முதல் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் உட்பட அனைத்தையும் குறிக்கும்.

“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்’ - 348

என்னுடைய உரை: தீரத் துறந்தவரே தலைப்பட்டார். தீர என்பது யான், எனது என்ற யாவற்றையும் துறந்தவரே தலைப்பட்டார். அஃதாவது வீடுபேறு பெறுவர் என்பதும் தீரத் துறக்காதவர்களுக்கு அப்பேறு இல்லையாம் என்பது கருத்து.
எனவே, அக்குறள் முற்றும் துறந்தவர்களின் பெருமை சொல்லவருகிறதே ஒழிய இல்லறத்தானின் பெருமையைச் சொல்ல வரவில்லை என்பதை நன்கறியலாம். இதனற்றான் யான் மணக்குடவர் உரை சிறந்தது என்று கூறலுற்றேன்!

சமணக் கருத்து

சமணக் கொள்கைப்படி இருவினையாகிய நல்வினையையும், தீயவினையையும் அகற்றினால்தான் வீடுபேறு கிட்டும். இறைவனாக விளங்க முடியும். இருவினை சேரா இறைவன் என்பதும் தேவர் வாக்கன்றோ? சமணத்தின்படி, உயிர்கள் தத்தம் வினைகளின்படி நான்கு கதிகளை அடையும். அவை மனிதக்கதி, தேவக்கதி, மிருகக்கதி, நரகக்கதி என்பனவாம். உயிர்கள் முறையே நல்வினை கட்டினால் தேவக்கதி, மனிதக்கதியையும், தீவினை கட்டினால் விலங்குக்கதி, நரகக்கதியையும் அடையும்.

இக்கதிகளில் மனிதக்கதியே சிறந்ததாம்! அரிதரிது மானிடராய் பிறத்தலரிது என்பது சமணப் பிராட்டி அவ்வை வாக்கு. மனிதக்கதியில் இருந்தே “சிவகதி”யடைய முடியும்; அஃதாவது வீடுபேறு அடைய முடியும் என்பது சமணக் கோட்பாடு. (சிலப்பதிக்காரத்தில் “சிவகதி நாயகன்” என்று அருக பகவான் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.)

இந்திரன்

தேவக்கதியில் பிறந்தவர்களை தேவர்கள் என்றும் அழைக்கிறது சமணம். இவர்களுக்கு தலைவன் ‘இந்திரன்” எனப்படுபவன். இங்கு இந்திரன் என்பது ஒருவர் அல்லர். தேவர்களில் தலைசிறந்தவர்களை ‘இந்திரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆதலால், இந்திரப் பதவி என்பது நன்னடத்தை உள்ள ஒருவரே வகிக்க முடியும். இங்கு கூறப்படும் இந்திரன் வைதிக சமயத்தில் கூறப்படும் இந்திரன்போல் அல்லன். “சமண இந்திரன்” நன்னடத்தை உள்ளவன். காமுகன் அல்லன். மொழிக்கு இலக்கணம் படைத்த முனைவன். பேரறிஞன். இதனால் இந்திரன் பதவி என்பது நன்னெறியுள்ள உயிர்களுக்கே கிடைக்கும் பேறு.

இந்திரன் பணிதல்

சமண மரபுப்படி, எவர் ஒருவர் தம் ஐந்து புலன்களையும் தவமேற்றி “மெய்யுணர்வு” (வாலறிவு) பெறுகிறாரோ அப்போது இந்திரன் தன் அவதி ஞானத்தால் அறிந்து அவர் முன் மண்டியிட்டு வணங்குவான் என்பது கருத்து.

1. தேவக்கதி என்பது கிடைத்தற்கரியக் கதி. அவற்றிலும் இந்திரப் பதவி அடைவதென்பது பெரும்பேறு.
2. அப்பேற்ப்பட்ட பேறு பெற்ற இந்திரனே மனிதக்கதியில் பிறந்து முற்றும் துறந்துவர்களை வணங்கினான் என்றால் ‘முற்றும் துறந்தவர்” ஆற்றல் எத்தகையது என்பது சொல்லாமல் விளங்கும்!

இது தீர்த்தங்கரர்களுக்கும் பொருந்தும். எப்படியெனின்,

கடை கல்யாணம்

தீர்த்தங்கரர் வாழ்க்கையில் முக்கிய ஐந்து சம்பவங்களை பஞ்ச கலியாணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது சமணம். அவை முறையே, கர்ப்பாவதரண கல்யாணம், ஜன்மபிஷேக கல்யாணம், தீட்சாக் கல்யாணம், வேலாற்பத்தி கல்யாணம் மற்றும் பரிநிர்வாணக் கல்யாணம் என்பனவாம். இதில் தீர்த்தங்கர பகவான் வேலாற்பத்திக் கல்யாணம் என்னும் வாலறிவு பெறும்போது விசும்புலகில் உள்ள இந்திரனுடைய சிம்மாசனம் ஆடுமாம். இதனால், இந்திரன் தீர்த்தங்கர பகவான் வாலறிவு பெற்றதை உணர்ந்து, அவரைக் கண்டு அடிபணிந்து வணங்குவான் என்பதும் ஈண்டு நினைத்தற்பாலது.

எடுத்துக்காட்டாக,

“பயம்பகை பணித்த லார்வஞ் செற்றமே கவர்ச்சி சோகம்
வியந்திடல் வெகுளி சோபம் வேர்த்திடல் விரும்பல் கேதம்
மயங்குதல் தெளிதல் சிந்தை வருந்துதல் களித்தல் மாயம்
இயம்பருந் திறந்த வின்ன யாவையு மெறிந்தி ருந்தார்’
- மேருமந்தர புராணம் (1385)

உரை: இப்பாடல் முற்றும் துறந்தவர் இலக்கணத்தைச் சொல்கிறது.


“ ஆயிடை யமரர் தங்கண் முடியொடா சனந்து ளங்கப்
பாயநல் லவதி யென்னும் பருதியாற் கண்ட தெல்லாம்
ஆயிரங் கண்ணி னானை யதிபதி யாகச் சூழ்ந்து
மாயிரும் விசும்பும் மண்ணும் மறையவா னவர்கள் வந்தார்
- மேருமந்தர புராணம் (1386)

உரை: மேலே கூறப்பட்ட இயல்பைக் கொண்ட துறந்தார் முன், ‘ முடியுடன் - கீரிடமுடன், ஆசனமும் - இருக்கையும்’ சனந்து - ஆட அல்லது சலிக்க கண்டு அவதி ஞானத்தால் உணர்ந்து அவரைக் காண வந்தார்கள்.

மேலும்,

“அரம்பையர் நடம்பு ரிந்தா ரம்பர மரங்க மாக
.......
.......
யுரங்கடிந் திருந்த வீர ருறுதுணை யடிப ணிந்தார்”
- மேருமந்தர புராணம் (1388)

உரை: அப்படி அமரர்கள் சூழவந்த இந்திரன் அவர் இரண்டு பாதம் அடி பணிந்தான்.
என்று மேலே காட்டியப் பாடல் உரைக்கிறது.

இன்னுமொரு காட்டு,

“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)

உரை: எட்டு குணங்களையுடைய என்னை காப்பவராகிய தலைவருக்குக் கேவல ஞானமானது தோன்றிய பொழுது, நால்வகைத் தேவர்களும், அவர்களுடைய தலைவனான இந்திரனும் அவருக்கு சிறப்பு செய்ய முன்னுவரே - வருவரே என்பது பொருள்.

முடிபு

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி”

இந்தக் குறளில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘அகல்விசும் புளார்கோமான் இந்திரனே” என்பது மேலுலகத்தின் கோமானான இந்திரனே என்று இந்திரனை உயர்த்தியே கூறப்பட்டிருக்கிறது. கோமான் என்று சிறப்படை மொழிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றான் மனைவியை வஞ்சித்தானுக்கு கோமான் என்று சொல்வரோ? அவன் கயவன், காமுகன் அல்லவா? “அகல்விசும் புளார்கயவன் இந்திரனே” என்று தானே பாடியிருக்கவேண்டும். அவ்வாறில்லாமல் சிறப்பு அடைமொழி கொடுத்து ஏன் கூறவேண்டும்?. குறளாசிரியர் உட்கருத்து யாது என்றால், கிடைதற்கரிய பேறு பெற்ற இந்திரனைவிட, முற்றும் துறந்து, ஐந்து புலன்களை அடக்கியவர்களே சிறந்தவர்கள் என்றுக் காட்டவே, இந்திரனை சான்றுக் காட்டினார் என்றறிக!.


அறம் மறவற்க!


இரா. பானுகுமார்,
சென்னை 61

8 comments:

சிறில் அலெக்ஸ் said...

நல்ல விளக்கங்கள்.

குமரன் (Kumaran) said...

பானுகுமார். பல நாட்களாக இந்தக் குறட்பாவைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்பட்ட ஐயம் தான் இது. ஐந்தவித்தான் ஆற்றலுக்கு இந்திரனின் தாழ்ச்சியை ஏன் எதிர்மறையாகக் காட்டியிருப்பதாக உரை சொல்கிறார்கள்; அப்படித் தோன்றவில்லையே என்று நினைத்துக் கொள்வேன். மணக்குடவர் உரையும் உங்கள் உரையும் ஏற்புடையதாகத் தோன்றுகிறது. மிக்க நன்றி.

Banukumar said...

குமரன் ஐயா!


வாருங்கள். தங்கள் உண்மையான பின்னூட்டிற்கு நன்றிகள் பல. நிறைய சான்றுகள் காட்டி எழுதியிருக்கலாம். நீலகேசி, பெருங்கதை, சூளாமணி, சீவக சிந்தாமணி போன்றவற்றில் இருந்து நிறைய சான்றுகள் கொடுத்திருக்கலாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்தக் கட்டுரையை எழுதி முடிக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது. அதனால் தான் கட்டுரை தொடர்ச்சியற்று இருக்கிறது. எழுத அமர்ந்தாலோ, கணினி முன் அமர்ந்தாலோ என்னுடைய இரண்டாவது மகன்(2 வயது) பக்கத்தில் வந்து அமர்ந்து விடுகிறான். எழுத முடிவதில்லை. தத்தம் மழலை மொழி கேட்கின்றவன் ஆயிற்றே யான் :-)
தொடர்ந்துப் படித்து வாருங்கள்.

இரா.பானுகுமார்,
சென்னை

Banukumar said...

வரவேணும் சிறில் அலெக்ஸ் ஐயா,

தாங்கள் முதல் முறையாக என் வலைப்பூ வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். தங்கள் பின்னூட்டிற்கு நன்றி. தொடர்ந்துப் படித்து வாருங்கள் ஐயா.

இரா.பானுகுமார்,
சென்னை

Venkatasubramanian said...

//இந்த குறள் சொல்லப்பட்ட இடம் ‘நீத்தார் பெருமை”. ‘நீத்தார்’ என்பது ‘முற்றும் துறந்த முனிவர்’களைக் குறிப்பது. அஃதாவது, முற்றும் துறந்தவர்களுடைய பெருமை என்பது பொருள். அவ்வாறே, அந்த கருத்திலேயே அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.//

வணக்கம் பானுகுமார் அய்யா.

மேற்கூறியது முற்றிலும் சரியன்று. நீத்தார் பெருமை யில் வள்ளுவனார் பெரியோரைப் பற்றியும் பேசியுள்ளார். அந்தணரைப் பற்றியும் பேசுகிறார். இதில் நீத்தார் என்பது துய்ப்பதை நீத்தார் (அஃதாவது ஆசைகளை) நீத்தார் (வென்றார்) என்பது (ஓரளவிற்கு) சரி என்று படுகிறது.

இந்திரன் கடவுள் அல்லன். துறந்தவன் அல்லன். அவன் வெறும் நன்மைகளை (புண்ணியங்களை) மற்றும் அறவழி சென்று , வேள்விகளாலும் , உலகியல் மற்றும் சுவர்க்கவியல் மையமாகக் கொண்ட தவத்தாலும் அமரர் அதிபதி பதவியை அடைந்தவன்.

மேலும், தேவர்கள் ஒன்றும் அறமே உருவானவர்கள் என்றும் கூற முடியாது. அவர்கள் வெறும் புண்ணிய மூட்டை என்ற ஒரு பாரத்தை சுமப்பவர்கள். அவர்களுக்கு முத்தி மீண்டும் பூவுலகில் தான் கிட்டும்.

கிடக்கட்டும். வேடத்தில் வரும் இந்திரனுக்கும் , புராணத்தில் வரும் இந்திரனுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. வேதத்தில் வரும் இந்திரன் மன்னன், தலைவன் போன்ற பொருள்களிலும் வருகிறான். புராண இந்திரன் ஒரு ரொமான்டிக் பர்சனாலிட்டி ஆகவும் சித்தரிக்கப் படுகிறான்.

வள்ளுவர் கூறும் இந்திரன் நிச்சயமாக புராண இந்திரனே. புராணத்தில் தான் இந்திரன் பதவி சுழற்சி முறை உள்ளது என்றும் எப்போது வேண்டுமானாலும் வேட்டு வரும் என்று உள்ளது. புராணம் வெறும் உருவகம். (allegories) என்று
ஆங்கிலத்தில் கூறுவார்.

இதை வைத்து சமண இந்திரனா , புராண இந்திரனா என தீர்மானிக்க முடியுமா ?

////சமணக் கொள்கைப்படி இருவினையாகிய நல்வினையையும், தீயவினையையும் அகற்றினால்தான் வீடுபேறு கிட்டும். இறைவனாக விளங்க முடியும். இருவினை சேரா இறைவன் என்பதும் தேவர் வாக்கன்றோ? சமணத்தின்படி, உயிர்கள் தத்தம் வினைகளின்படி நான்கு கதிகளை அடையும். அவை மனிதக்கதி, தேவக்கதி, மிருகக்கதி, நரகக்கதி என்பனவாம். உயிர்கள் முறையே நல்வினை கட்டினால் தேவக்கதி, மனிதக்கதியையும், தீவினை கட்டினால் விலங்குக்கதி, நரகக்கதியையும் அடையும். ////

தேவ கதி வேறு . முத்தர்களின் விஷயமே வேறு. நீங்கள் சேர்த்துக் குழப்பி விட்டீர்கள். தேவா கதியில் சென்றால் மீண்டும் பிறப்பு நிச்சயம். முத்தர்களுக்குப் பிறப்பேது ?

////அப்பேற்ப்பட்ட பேறு பெற்ற இந்திரனே மனிதக்கதியில் பிறந்து முற்றும் துறந்துவர்களை வணங்கினான் என்றால் ‘முற்றும் துறந்தவர்” ஆற்றல் எத்தகையது என்பது சொல்லாமல் விளங்கும்!////

அய்யா ! இக்குறளில் பொறிகளை அவித்தவன் தேவர் பதவியை அடையலாம் என்று குறிப்பு கட்டப்பட்டுள்ளது. அவித்தவன் எல்லாம் சீவன் முத்தன் அல்ல. வள்ளுவர் முத்தி பற்றி பிறவாழி நீத்தல் என்றே கூறுகிறார். மேல் லோகப் பதவி பற்றி கூறவில்லை கவனியுங்கள்.

ஆக, உங்கள் விளக்கம் முற்றிலும் சரி அல்ல. இது ஒன்றும் (exclusive)சமணக் கருத்தாகக் கொள்ள முடியாது. வைதீக மதத்தின் முத்திரை தெளிவாக உள்ளதே.

அன்பன்
வெங்கட்

Anonymous said...

mathipirkuriya banukumar aiya avargalluku intha thalathil ulla katuraigalai padithahin moolam thangal mel migantha pattru kondullen.....enakku samana madam patriya inna pira veisahyangali therindu kolla virumbugiren...matrrum venkat enbavarukku thangal pathil thanthu avarathu koootru tavaru endru unarthu maaru vendugiren

prince said...

அன்புள்ள பானுகுமார்,
தங்கள் கருத்து முற்றிலும் சரி, சமண மற்றும் பெளத்த மதங்கள் தேவ பிறவியை விட உயர்ந்ததாக மனித பிறவியை கருதுகின்றன.
புத்தர் ஞானம் பெற்ற போது இந்திரன் நேரில் வந்து வணங்கினார் என்றும்.
திருக்குறளில் மழை வாழ்த்தில் மழை இன்றேல் தானம், தவம் கெடும் மேலும் தேவர்களுக்கு வழங்கும் வேள்வி அற்று போகும் என்கிறார்.
வேள்வி தேவர்களை திருப்திப் படுத்த கொடுக்கப்படுவது. ஆகவே தேவர்கள் மனிதர்களை சார்ந்து இருப்பதாக பொருள் வரும்.

Anonymous said...

"இக்கதிகளில் மனிதக்கதியே சிறந்ததாம்! அரிதரிது மானிடராய் பிறத்தலரிது என்பது சமணப் பிராட்டி அவ்வை வாக்கு".நன்கு சிரித்தேன். அவ்வையார் சமணரா ?. அவ்வாறாயின் எதற்கு சிவனைப்பற்றி இவ்வாறு எழுதினார் ?.

"சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்"

பூம்புகார் திரைப்படம் பார்த்து எழுதிணீரோ ?